வெகு நாட்களுக்குப் பிறகு தாக சாந்திக்கேற்ற ஜூஸுடன் வருகிறேன். இதன் பெயர் பன்னா. மாங்காயில் செய்யப்படுவது.
நீங்களும் கேள்விப் பட்டிருப்பீர்கள்.
வட இந்தியாவில் மாங்காய் சீஸனில் கட்டாயம் இதைச் செய்கிரார்கள். செய்வதும் எளிது. ருசியும் இருக்கிறது. குடி பட்வா சிறப்புப் பானமும் இது.
புளிப்பு ருசி பிடிக்காதவர்கள் அதிக புளிப்பில்லாத மாங்காயில் செய்து ருசிக்கலாம்.
கிளிமூக்கு மாங்காய் போன்ற வகைகளிலும் செய்யலாம்.
என்னுடைய மருமகள் அடிக்கடி செய்வதால் எனக்கு மிகவும் பிடிக்கும்.
நம் பக்கத்தில் ஐயோடி! இருக்கிற வெய்யில் போதாதா? மாங்காய் உஷ்ணமாச்சே. அதிலே ஜூஸ் வேறு செய்து சாப்பிட்டால் உடம்பிற்கு ஆகுமா என்பார்கள். பொதுவாக இம்மாதிரி வார்த்தைகள்தான் வரும். ஆனால் அப்படி இல்லை.
வெயில் நேரத்தில் ஜில் என்ற இந்த ஜூஸ் குளிர்ச்சியைத் தரும். தாக சாந்தியாகும். வெந்த மாங்காய். ஆதலால் நல்லதே!
மாங்காயில் எவ்வளவு வகை செய்கிறோம்? அப்படி இதுவும் ஒன்று.
வாருங்கள் நாமும் சற்று முற்றிய மாங்காயொன்றில் செய்வோம்.
வேண்டியவைகள்.
மாங்காய்---ஒன்று.
சர்க்கரை-- நான்கு டீஸ்பூன், ருசிக்குத் தக்க அதிகரிக்கவும்.
சின்ன துண்டு இஞ்சி
புதினா இலை--4
காலாநமக் என்னும் இந்துப்பு அரை டீஸ்பூன்.
ஏலக்காய்--1
சின்ன குக்கரில் ஒரு டம்ளர் தண்ணீருடன் முழு மாங்காயைச் சேர்த்து நான்கு விஸில் சத்தம் வரும்வரை வேக வைத்து இறக்கவும்.
இல்லை, பருப்பு வேகவைக்கும் போது வேறு ஒரு ஸப்ரேட்டரில் அதன் மேல் வைத்துவேக வைத்தாலும்ஸரி.
ஆறினவுடன் மாங்காயின் மேல்த் தோலை நீக்கவும்.
மாங் கதுப்புக்களை ஒரு ஸ்பூனினால் கொட்டையினின்றும் தனியாகப் பிரித்துக் கொட்டையை நீக்கி விடவும்.
வெந்த மாங்கதுப்புகளுடன்,புதினா,இஞ்சி,ஏலக்காய்,காலாநமக் சேர்த்து மிக்ஸியில் குளிர்ந்த நீர் சேர்த்து அரைக்கவும்.
அரைத்த விழுதில் இரண்டு கப் அளவு குளிர்ந்த நீர் சேர்த்துக் கரைத்து, வடிகட்டியில் வடிக்கட்டவும்.
. சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். ருசி பார்த்து வேண்டியவைகளை அதிகரித்து, கோப்பைகளில் நிறப்பி அழகு பார்த்துப் பருகவும். ருசியான பன்னா!
புளிப்புக்கேற்ப இனிப்பும்,தண்ணீரும் அதிகமாக்கலாம்.
ஸ்ரீராம நவமி நிவேதனத்தில் பன்னாவும் சேர்த்து விட்டேன். நாம் மட்டும் ருசிக்கலாமா?