Sunday 31 December 2017

வாழ்த்துகள்

அன்புள்ளம் கொண்ட பதிவர்கள் யாவருக்கும் என் இனிய  ஆங்கிலப் புத்தாண்டு  நல்வாழ்த்துகள். அன்புடன்  காமாட்சி

Thursday 7 December 2017

மூலிகை மிக்ஸ்



மூலிகையைத் தேடிக்கொண்டு போகவேண்டுமா.  அப்படியெல்லாமில்லை.  ஸுலபமாக நாம் உபயோகிக்கும் ஸாமான்கள்தான்.
பெயர் கொஞ்சம்  மாறுதலாயிருந்தால் படிக்கத் தூண்டும்.  செய்யவும் தூண்டும். இது எந்தவகையோ தெரியாது. ஆனால்  சாப்பிடத் தூண்டும்.பசியையும் தூண்டும்.  செய்வதும் ஸுலபம்தான்.  வேண்டியவைகளைப் பார்ப்போமா.

வீட்டிலிருந்தவைகளைக் கொண்டே  செய்த  ருசியான ஒரு பொடி.
பச்சைகறிவேப்பிலை--- இரண்டுகப்.சுத்தம் செய்து ஈரமில்லாமல் துணியில் பரத்தி வைக்கவும்.
முதல்நாள் வாங்கிய புதினாவைக்  காயப் போட்டிருந்தேன் . அது அரை கப் இருக்கும்.
கடலைப்பருப்பு----இரண்டு டேபிள்ஸ்பூன்.
உளுத்தம் பருப்பு ----ஒரு டேபிள்ஸ்பூன்
துவரம்பருப்பு----இரண்டு டேபிள்ஸ்பூன்
மிளகு,சீரகம் ---வகைக்கு அரை டீஸ்பூன்
வெள்ளை எள்---ஒரு டேபிள்ஸ்பூன்
காய்ந்த குண்டு மிளகாய்----நான்கு
ஒரு நெல்லிக்காயளவு புளி
உப்பு,பெருங்காயம் தேவைக்கு.
செய்முறை
வாணலியை அடுப்பில் காயவைத்து  எள்ளைப் போட்டு படபடவென்று பொரியும் படி சிவக்க வறுத்து எடுக்கவும்.
அதே வாணலியில்  பருப்புகளையும் தனித்தனியாக எண்ணெய் விடால் சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.தீ நிதானமாக இருந்தால் தீயாமல் பருப்புகள் வறுபடும்.  மிளகு சீரகத்தையும் லேசாக வறுத்துக் கொள்ளவும்.
புளியையும் பிய்த்துப் போட்டு வறுத்தெடுக்கவும்.
மிளகாயைச் சொட்டு எண்ணெய் விட்டு வறுத்தால்தான் நல்லது.ஒரு அரை டீஸ்பூன் எண்ணெயை வாணலியில் காயவைத்து
   கறிவேப்பிலையைப் லேசாக வறுத்து  தீயை நிறுத்தி விடவும்  அதிலேயே வைக்கவும்.
நமுத்துப்போகாமல் இருக்கும்.
யாவும் ஆறிய பின்னர்    பருப்புகள்,மிளகு சீரகம்,மிளகாய்இவைகளை கரகர பதத்தில்  மிக்ஸியில்  பொடிக்கவும்.  வறுத்தபுளி, அல்லது  புளிப் பொடியாக இருந்தால் அதையும், வறுத்த எள்,உப்புசேர்த்து ஒரு சுற்று சுற்றவும்.  வறுத்த கறிவேப்பிலை,காய்ந்த புதினா இவைகளையும் சேர்த்து   பருப்புப்பொடி பதத்தில் அரைத்தெடுத்து   பெருங்காயப்பொடி கலந்து  ஒரு பாட்டிலில் பத்திரப் படுத்தவும். மிகவும் நைஸாக பொடிக்கக் கூடாது.
சாதத்தில்  நெய் விட்டுக் கொண்டு இப்பொடியைச் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.  பச்சடி,மோர்குழம்பு,வெந்தயக்குழம்பு இவைகள் ஜோடி சேரும்.  தாளித்துக்கொட்டிக் கலந்த சாதமாகவும் தயாரிக்கலாம்.
நான் நாரத்தை அல்லது எலுமிச்சை இலைகளையும் ஒன்றிரண்டு உடன் சேர்ப்பேன்.  வாஸனையாக இருக்கும்  எதுவும் மற்றவர்களுக்கு விருப்பம் வேண்டுமே!












Monday 16 October 2017

தீபாவளி வாழ்த்துகள்

அன்புள்ளம் கொண்ட  யாவருக்கும்    காமாட்சியின்  மனங்கனிந்த   இனிய தீபாவளி நல் வாழ்த்துகளும்,  அன்பும்.சொல்லுகிறேன்  காமாட்சி.  17--10--2017. டில்லி.

Thursday 21 September 2017

வாழ்த்துகள்

அன்பான யாவருக்கும் காமாட்சியின்  மனமுவந்த  இனிய நவராத்திரி நல் வாழ்த்துகள்.  அன்புடன்.

Wednesday 23 August 2017

வாழ்த்துகள்.

யாவருக்கும்  பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்.






நல்லவைகளையே   அருள்வாய்.   பாதம் பணிகின்றோம்.  அன்புடன்

Saturday 22 July 2017

காரஸார டொமேடோரைஸ்




காரஸாரமான டொமேடோரைஸ்.
நல்ல வண்ணம் நிறைந்த தக்காளிச் சாதம். காரமும் தான்.
நல்ல பழுத்த பெங்களூர் தக்காளி வகை நிரம்பவும் நல்லது.   கலந்த சாத வகைகளில் இதுவும் ஓரிடத்தைப் பிடித்து விட்டது.
சின்னவர்கள்,பெரியவர்கள் எல்லோரும் விரும்பி ருசிப்பது. நீங்களும் ருசியுங்கள்.
கலந்த சாதங்களுக்கெல்லாம், சற்று மெல்லிய நீண்டவகை அரிசிகள் மிகவும் நல்லது. நாம் எந்த வகை அரிசி உண்கிரோமோ அதில் தயாரிப்பதுதான் சுலபம்.
சற்றுப் பருமனான அரிசி வகைகளுக்கு துளி காரம்,உப்பு அதிகம் வேண்டுமாக இருக்கலாம்.
செய்து,செய்து இரண்டொரு முறை பழக்கப் பட்டால், நீங்களே பல பேருக்கு வகை சொல்லுவீர்கள்.
வேண்டியவைகள்
நன்றாகப் பழுத்த கலரான தக்காளி---4 பெரியது.
வெங்காயம்---பெரியசைஸ்---1
இஞ்சி---அரை அங்குலத் துண்டு
நல்லெண்ணெய்----2 டேபிள்ஸ்பூனிற்கு அதிகம்
கடுகு---அரை டீஸ்பூன்
கடலைப் பருப்பு,வேர்க்கடலை வகைக்கு 2 டீஸ்பூன்கள்
மிளகாய்ப்பொடி----அரை டீஸ்பூன் ,பெருங்காயப் பொடி  சிறிது
டொமேடோ சாஸ் அல்லது கெச்சப்-----1 டீஸ்பூன்
ருசிக்கு உப்பு
வற்றல் மிளகாய்----1
அரிசி---11/2 கப் கறிவேப்பிலை  வேண்டிய அளவு.
செய்முறை.
அரிசியை உதிர் உதிரான சாதமாகச் செய்து, தாம்பாளத்தில்கொட்டி ஆறவிடவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, தக்காளிப்பழத்தை அதில் போட்டு  இறக்கி ஒரு தட்டினால் மூடி வைக்கவும்.
தண்ணீர் ஆறிய பிறகுதக்காளிப்பழத்தைவெளியிலெடுத்து  ஒவ்வொன்றாகத் தோலை உரிக்கவும்.
உரித்த தக்காளி,நறுக்கிய வெங்காயம், இஞ்சி இவைகளை மிக்ஸியில் தண்ணீர் விடாது அறைத்துக் கொள்ளவும்
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து,மிளகாய்,கடுகு,பெருங்காயம் தாளித்து,பருப்பு வகையையும் சேர்த்து சிவக்க வருக்கவும்
கரிவேப்பிலையை உருவிச் சேர்த்து  அரைத்த விழுதைக் கொட்டிக் கிளரவும். மிளகாய்ப் பொடி சேர்க்கவும்.
உப்பு,டொமேடோ சாஸ் சேர்த்து மிதமான தீயில் சுருளக் கிளரவும்.
எண்ணெய் பிரிந்து தொக்கு மாதிரி சேர்ந்து வரும் போது, சாதத்தையும்
சேர்த்துக் கிளறி சூடேறினதும் இறக்கி வைத்து உபயோகிக்கவும்.
ருசியான கலர்ஃபுல் டொமேடோரைஸ் தயார்.
உருளைசிப்ஸ்,அப்பளாம் பொரித்தது இவை எல்லாம்  இதனுடன் ருசியோ ருசிதான். வாழைக்காய் வறுவல்,நேந்திரங்காய் வருவல்,மிக்சர் சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள்.
சாஸோ,கெச்சப்போ சேர்த்தால் கலர்,ருசி இரண்டும் கூடுதலாகக் கிடைக்கும்.
ஸ்கூலில் லன்ச் சாப்பிடும்போது பருப்புகளெல்லாம் வேண்டாம் என்று
பேத்தியின் விருப்பத்திற்கிணங்க  செய்தது இது. நீங்கள் பருப்புகளெல்லாம் போடுங்கள். முந்திரியும்  போடலாம்.

பார்ப்போமா அரிசிகூட பாஸுமதி இல்லை  இது. சீரகச்சம்பா போன்ற அரிசி .  மேலே உள்ளபடம்  மாதிரிக்குதான்.
















Tuesday 13 June 2017

உருளை பனீர் கோப்தா


உருளைக்கிழங்கும்  பனீரும் சேர்த்து நாம் இப்போது  கோப்தா செய்யலாம்.  பூரி ரொட்டி முதலானவைகளுடன்  விருந்தினர்களுக்கு இரண்டு மூன்று வகை   ஸைட்டிஷ் கொடுக்க இது மிகவும் உபயோகமாக இருக்கும்.
பார்க்கவும்   அழகு.
எங்கள்வீட்டில்  பூரியுடன்  இதுவும் ஒன்றாகச் செய்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.   மிக்க நாட்களாயிற்று . இந்தப்பக்கம் வந்து.
பனீர் குறைவாகஇருந்தது.   அதனால் உருளை சேர்த்து செய்தது.  பார்க்கலாம் . வேண்டிய பொருட்களை.
பனீர்----200 கிராம்.    வேகவைத்த உருளைக்கிழங்கு திட்டமான ஸைஸ் --3
பொடியாக நறுக்கிய  பச்சை மிளகாய்--2,   பொரிப்பதற்கு எண்ணெய்,  கார்ன்ஃப்ளேக்ஸ் மாவு --2 டீஸ்பூன்.

மஸாலா பொடிக்க  லவங்கம்--4, மிளகு அரை டீஸ்பூன்,   ஏலக்காய்---2,பட்டை சிறிதளவு.    இவைகளை சுமாராக பொடித்துக் கொள்ளவும்.

வேண்டிய பொடிகள்.  மிளகாய்ப்பொடி---1 டீஸ்பூன்.  மஞ்சள்பொடி  அரை டீஸ்பூன்.தனியாப் பொடி-- சீரகப்பொடி முறையே  அரை டீஸ்பூன்.

அரைப்பதற்கு  தக்காளி--2,     இஞ்சி  அரை அங்குல நீளம்.வெங்காயம்--2

முந்திரிப்பருப்பு ---8
ருசிக்கு உப்பு.  தூவ மல்லி இலை சிறிது.
தாளிக்க  பிரிஞ்சி இலை--1 ,  நெய் சிறிது.

செய்முறை.
வேகவைத்த உருளைக்கிழங்கைத் தோல் நீக்கி மசித்துக் கொள்ளவும்.
அதனுடன்  பனீரையும் உதிர்துச் சேர்த்து நன்றாகப் பிசையவும்.  ;சற்றுக் குறைவாகவே  உப்பும்,  பச்சை மிளகாயும் சேர்த்து,கார்ன் மாவையும்  கலந்து  தண்ணீர் விடாமல்  கெட்டியாகப் பந்து போல் பிசைந்து,   ஸமமான உருண்டைகளாகப்  பிரித்து உள்ளங்கையில் வைத்து சிறிது தட்டையான ஷேப்பில் பிரஸ் செய்து    கோப்தாக்களை  செய்து  வைக்கவும்.

வெங்காயம்,தக்காளி இஞ்சியைத் தண்ணீர் விடாது கெட்டியாக அரைத்து  எடுத்துக் கொள்ளவும்.    முந்திரிப் பருப்பையும்  ஊறவைத்து,  தனியாக அறைத்துக் கொள்ளவும்.

மஸாலாதான் முன்பே பொடிக்கச் சொல்லி விட்டேன்.மீதி பொடிகள்தான்.
இப்போது வாணலியில் எண்ணெயைக்  காய வைத்து  பனீர்க்கலவை கோப்தாக்களை  பொரித்து எடுக்கவும்.




மற்றொரு வாணலியில்  இரண்டுஸ்பூன் நெய்யும் எண்ணெயுமாகக் கலந்து சூடுபடுத்தி,  பிரிஞ்சி இலையைத் தாளித்து   அரைத்தத் தக்காளி வெங்காய விழுதைக்  கூட்டிக் கிளறவும்.  சேர்ந்து வரும் போது, மஸாலாப் பொடிகள் மற்றும் பொடிகளைச்  சேர்த்துக்  கிளறி   முந்திரி   அரைத்திருப்பதையும் சேர்க்கவும். ஒரு கொதி வந்த பிறகு திட்டமாக  வேண்டிய உப்பு சேர்த்து    இரண்டு கப் தண்ணீர் சேர்த்துக் கிளறி கொதிக்க விடவும்.கொதிக்கும் கலவையை  நேரடியாக  ட்ரேயில் பரவலாகப் பரத்தியிருக்கும்   கோப்தாக்களின் மேல் விடவும்.
சூட்டில் ஊறிக்கொண்டு ஜம் என்று இருக்கும் கோப்தாக்கள். நேராக உணவு மேஜையின் மேல் வைக்க வேண்டியதுதான். கொத்தமல்லிஇலை தூவவும்.
படம் ஆரம்பத்திலேயே இருக்கிறது. பூரி,ரொட்டி,பரோட்டா எதனுடன் வேண்டுமானாலும் சாப்பிடலாம். உங்கள் இஷ்டம்.

Friday 13 January 2017

பொங்கல் ஆசிகள்.

இனிய மகர ஸங்ராந்தி. பொங்கல் வாழ்த்துகளைக் காமாட்சி   உங்களுக்கு அளிக்கிராள்.   
ஆசிகளும் வாழ்த்துகளும் அனைவருக்கும்.  அன்புடன் காமாட்சி.